tgoop.com/Varalatril_Intru/23328
Last Update:
வரலாற்றில் இன்று . செப்டம்பர் 30
1954 - உலகின் முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான, அமெரிக்காவின் நாட்டிலஸ் பயன்பாட்டுக்கு வந்த நாள்
இதற்கான திட்டத்தை உருவாக்கிய ஹைமென் ரிக்கோவர், அணுசக்திக் கடற்படையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இரண்டாம் உலகப்போரில் சிறப்பாகச் செயல்பட்ட அமெரிக்காவின் கப்பலின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது. பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான நாட்டிலோஸ் என்பதிலிருந்து உருவான லத்தீன் மொழிச் சொல்லான நாட்டிலஸ் என்பதற்கு மாலுமி என்று பொருள். இப்பெயரில் ஆழ்கடலில் வசிக்கும் நத்தை போன்ற ஓர் உயிரினமும் உள்ளது. லத்தீன் மொழியில் நாட்டிகஸ் (கிரேக்;க நாட்டிகோஸ்) என்பதற்கு மாலுமிகள் தொடர்பான என்று பொருள். அதனாலேயே கடல் மைல்கள் நாட்டிகல் மைல் என்று அழைக்கப்படுகின்றன. 1870இல் வெளியான ஓர் அறிவியல் புதினத்தில் நாட்டிலஸ் என்ற பெயரில் ஒரு நீர்மூழ்கி குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிய அணுமின் உலையைக் கொண்டு நீரைக் கொதிக்கவைத்து, நீராவிமூலம் இந்த நீர்மூழ்கி இயக்கப்படும். இதற்குக் கடல் நீரையே உப்புநீக்கம் செய்து பயன்படுத்துவார்கள். அணுசக்திக்கு முன்பு, நீர்மூழ்கிகள் பெட்ரோலியத்தாலும், மின்கலத்தாலும் இயக்கப்பட்டபோது, புகையை வெளியேற்றவும், மின்கலத்தை ரீச்சார்ஜ் செய்யவும் அடிக்கடி மேலே வரவேண்டும். உண்மையிலேயே நீர்மூழ்கிகளாக, மிக நீண்ட காலம் நீருக்கடியில் இருப்பது அணுசக்தி வந்தபின்னரே சாத்தியமானது. எரிபொருளைச் சேமிப்பதற்கான இடம் முதலானவையும் தேவையற்றுப் போயின. இந்த நீர்மூழ்கி 1958இல் நீருக்கடியிலேயே பயணித்து வடதுருவத்தை அடைந்தது. 1960இல் அமெரிக்காவின் மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி, நீருக்கடியிலேயே உலகைச் சுற்றிவந்தது. பெரிய விமானந்தாங்கிக் கப்பல்களிலும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் அணுமின் உலையின் நிறுவுதல், பராமரிப்பு செலவுகள் அதிகம் என்பதால், பொதுவாக ராணுவத்தில் மட்டுமே அணுசக்தி கப்பல்கள், நீர்மூழ்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
BY வரலாற்றில் 🏹 இன்று
Share with your friend now:
tgoop.com/Varalatril_Intru/23328